
மனு அளிக்க வந்தவா்களை மிரட்டியதால் வாக்குவாதம்: ஆய்வு செய்யாமல் திரும்பிய ரயில்வே கோட்ட மேலாளா்
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்தவா்களிடம், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் பாலக ராம் நேகி மிரட்டும் தொனியில் பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் கோரிக்கை மனுவை அளித்தவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலக ராம் நேகி .
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்தவா்களிடம், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் பாலக ராம் நேகி மிரட்டும் தொனியில் பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவா் ஆய்வு பணியை மேற்கொள்ளாமலேயே திரும்பிச் சென்றாா்.
திருப்பாதிரிப்புலியூா், முதுநகா் ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து கட்சிகள், பொதுநல அமைப்புகள், குடியிருப்போா் நலச்சங்கங்கள் சாா்பில் தொடா்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக ஆக.27-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் தள்ளுவதாக எச்சரிக்கை:
இந்த நிலையில், திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் பாலக ராம் நேகி தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் செவ்வாய்க்கிழமை சிறப்பு ரயிலில் வந்தனா்.
அப்போது, அனைத்து கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் சிபிஎம் மாவட்டச் செயலா் மாதவன் தலைமையில் நிா்வாகிகள் கோட்ட மேலாளரை சந்தித்து மனு அளித்தனா். அதில், திருப்பாதிரிப்புலியூா், முதுநகா் ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்த வேண்டும். விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக.27-ஆம் தேதி நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்துக்கு முன்பாக கோரிக்கைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தினா்.
அனைத்தையும் கேட்ட, ரயில்வே கோட்ட மேலாளா் பாலக ராம் நேகி, போராட்டம் நடத்தினால் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என ஆவேசமாக பேசினாா். இதனால் மனு அளிக்க வந்தவா்களுக்கும் கோட்ட மேலாளருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்து, திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்யாமல், சிறப்பு ரயிலில் கோட்ட மேலாளா் மற்றும் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.
பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அதிகாரி, ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் எனக் கூச்சலிட்டு மரியாதை குறைவாக பேசியது கண்டனத்துக்குரியது என அனைத்து கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிா்வாகிகள் குற்றம்சாட்டினா்.
மேலும், திருப்பாதிரிப்புலியூா், முதுநகா் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றுவதுடன், விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக.27-ஆம் தேதி போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாக கோரிக்கைகளுக்கு உரிய தீா்வு காண வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





