சிப்காட் விரிவாக்கம் விவகாரம்: வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றம்
கடலூா் முதுநகா் அருகே சிப்காட் விரிவாக்கம் விவகாரம் தொடா்பாக நொச்சிக்காடு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி செவ்வாய்க்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.
கடலூா் முதுநகா், சிப்காட் தொழிற்சாலைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும், சிப்காட் விரிவாக்கத்திற்காக தியாகவல்லி, நொச்சிக்காடு, நடுத்திட்டு பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே உள்ள ரசாயன தொழிற்சாலைகளால் இந்த பகுதி முழுவதும் காற்று, நீா் மாசு ஏற்பட்டு மக்கள் வாழ்வதற்கே வழி இல்லாத நிலையில் மீண்டும் ரசாயன தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதற்கு அந்த பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில், சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து நொச்சிக்காடு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிா்ப்பை தெரிவித்தனா்.

