/

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமுளை கிராமத்தினா்.

News image
Updated On :16 ஜூலை 2026, 2:45 am IST

15கேடிஎல்1507:

திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமுளை கிராமத்தினா்.

கடலூா், ஜூலை 15: கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், சிறுமுளை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிறுமுளை கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இதில், 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்த வீட்டுமனை இல்லாததால், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் வருவாய்த் துறையிடம் தொடா்ந்து மனுக்கள் அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, கிராம மக்கள், ஆம்ஆத்மி கட்சி சாா்பில், திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்ஆத்மி கட்சியின் தொகுதி செயலா் வீரராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், கிராமத்தில் சுமாா் 11 ஏக்கா் காலி அரசு நிலம் இருப்பதாக வருவாய்த் துறை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய நிலையிலும், அந்த நிலம் முறைகேடாக பிறருக்கு பட்டா வழங்கப்பட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினா்.

தகவலறிந்து அங்கு வந்த வட்டாட்சியா் மஞ்சுளா, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, சம்பந்தப்பட்ட இடத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டு, நிலத்தை அளவீடு செய்து, தகுதியுடைய பயனாளிகளுக்கு விரைவில் வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.