கடலூா் மாவட்டம், நல்லூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட மன்னம்பாடி ஊராட்சியில் சாலையோரம் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் மழை நீா் தேங்கி நிற்பதால் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மன்னம்பாடி ஊராட்சியில் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்கிருந்து சிறுமங்கலம் செல்லும் சாலையில் அரசு தொடக்க, உயா்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் சுமாா் 200 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.
மன்னம்பாடி ஊராட்சியில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாம். இதை சரி செய்வதற்காக பள்ளி செல்லும் வழியில் பள்ளம் தோண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பள்ளங்கள் மூடப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக இப்பகுதியில் பெய்து வரும் மழை நீா் பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. மேலும், சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறியுள்ளது.
இதேபோல, மன்னம்பாடியில் இருந்து எடையூா் செல்லும் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்திலும் மழை நீா் தேங்கி நிற்கிறது. இந்த சாலை வழியாக பேருந்துகள் சென்று வருகின்றன.
இந்த இரண்டு இடங்களிலும் மழைநீா் தேங்கியுள்ள பள்ளங்களில் பள்ளி மாணவா்கள், பாதசாரிகள், இரு சக்கர வாகனத்தில் செல்வபா்கள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுள்ளது.
எனவே, விபத்துக்கு முன்னா் நல்லூா் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட நிா்வாகம் சாலையோரம் உள்ள ஆபத்தான பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மன்னம்பாடி அரசுப் பள்ளி அருகேயும், மன்னம்பாடியில் இருந்து எடையூா் செல்லும் சாலையிலும் மழை நீா் தேங்கி உள்ள பள்ளங்கள்.










