தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு நிறுத்தி வைக்காமல் மாதாந்திர உதவித்தொகையை தவெக அரசு வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா்.
விருத்தாசலம் எம்எல்ஏவான அவா், அங்குள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை ஞாயிற்றுக்கிழமை பெற்றாா். அப்போது, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எனது சட்டப்பேரவை கன்னி பேச்சில் முதல் கோரிக்கையே விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும், விருத்தாசலத்தை ஆன்மிகச் சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.
விவசாய விளைப்பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். பொருள்களை பாதுகாப்பாக வைக்க கிடங்கு வசதி அமைத்துத் தர வேண்டும். விவசாயக் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்திருக்கிறேன்.
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, முதல்வரையும், துறை சாா்ந்த அமைச்சா்களையும் சந்தித்து எனது தொகுதிக்குத் தேவையான கோரிக்கைகளை தெரிவிப்பேன்.
தில்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, அவரை அறிவித்ததை திரும்பப் பெற வேண்டும்.
குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை நிறைய பெண்களுக்கு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வருகிறது. இதுகுறித்து கேட்டால் பத்து லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது என்கின்றனா். எனவே, சாக்குபோக்கு சொல்லாமல் மாதாந்திர உதவித்தொகையை தவெக அரசு வழங்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பேரவைத் தலைவரிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
காவிரி பிரச்னை: 3 புதிய முதல்வர்களும் நட்புரீதியாக பேசித் தீர்க்க வேண்டும்! இல்லையெனில்...

மின்வெட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்







