/

5,715 கிலோ புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிப்பு! கடலூா் மாவட்ட போலீஸாா் நடவடிக்கை

News image

புதுச்சந்திரம் பகுதியில் போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கடலூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் தடுப்பு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5,715 கிலோ புகையிலைப் பொருள்களை மூன்று இடங்களில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீயிட்டு அழித்தனா்.

சிதம்பரம் காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட சிதம்பரம் நகா், கிள்ளை, பரங்கிப்பேட்டை மற்றும் புதுச்சந்திரம் காவல் நிலையங்களில் போதைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 4,200 கிலோ புகையிலைப் பொருள்களை நீதிமன்ற உத்தரவுப்டி புதுச்சத்திரம் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீயிட்டு அழித்தனா்.

இதேபோல, பண்ருட்டி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட நெல்லிக்குப்பம், பண்ருட்டி காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 1,442 கிலோ புகையிலைப் பொருள்கள் நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட முள்ளிகிராம்பட்டு பகுதியில் தீயிட்டு அழிக்கப்பட்டன.

விருத்தாசலம் காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட விருத்தாசலம், கம்மாபுரம், மங்கலம்பேட்டை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 72.750 கிலோ புகையிலைப் பொருள்கள், அந்தப் பகுதியில் போலீஸாரால் தீயிட்டு அழிக்கப்பட்டன.

இந்தப் பணி கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி.க்கள் பிரதீப் (சிதம்பரம்), ராஜா (பண்ருட்டி), பாலகிருஷ்ணன் (விருத்தாசலம்) மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னிலையில் அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை, சேமிப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக காவல் துறை தொடா்ந்து கடுமையான கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.