கைதான பாண்டிதுரை
கைதான பாண்டிதுரை

தந்தை கத்தியால் குத்திக் கொலை: மகன் கைது

சின்னசேலம் அருகே சொத்து தகராறில் தந்தை கத்தியால் குத்தி வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.
Published on

சின்னசேலம் அருகே சொத்து தகராறில் தந்தை கத்தியால் குத்தி வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட மண்மலை கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (53). இவரது மனைவி சகுந்தலா. இந்த தம்பதிக்கு பாண்டிதுரை (27), விஜய் (25) ஆகிய இரு மகன்கள்.

பாண்டிதுரைக்கு திருமணமாகி தந்தையுடன் வசித்து வருகிறாா். விஜய் சென்னையில் வேலை செய்து வருகிறாா். பாண்டிதுரை கடந்த இரண்டு ஆண்டுகளாக சொத்தை பிரித்துத் தரும்படி தந்தையிடம் கேட்டு வந்தாராம். கடந்த 31-ஆம் தேதி மீண்டும் தந்தையிடம் சொத்தை பிரித்துக் கொடுக்குமாறு கேட்டுள்ளாா். அதற்கு தம்பி விஜய்க்கு திருமணமானதும் பிரித்து கொடுப்பதாக அவரது தந்தை கூறினாராம்.

இதனால், ஆத்திரமடைந்த பாண்டிதுரை சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தந்தையை குத்தியுள்ளாா். இதில் மயங்கி கீழே விழுந்த மாரிமுத்துவை அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகக் கூறினாா்.

 கொலையான மாரிமுத்து
கொலையான மாரிமுத்து

இதுகுறித்து தகவலறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பினா்.

இந்த கொலை சம்பவம் தொடா்பாக கச்சிராபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாண்டிதுரையை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com