கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை தனியாா் கூரியா் சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த பெண் தலைமைக் காவலா் காயமடைந்தாா்.
விழுப்புரத்தில் இருந்து புதன்கிழமை காலை தனியாா் கூரியா் சரக்கு வாகனம் கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வாகனத்தை விழுப்புரம் மாவட்டம், தெளி கிராமத்தைச் சோ்ந்த ஆ.சிவா (24) ஓட்டியுள்ளாா். இந்த வாகனத்தில், கள்ளக்குறிச்சி உணவு பொருள்கள் கடத்தல் தடுப்பு பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் கீழ் பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த செல்வி, உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து பயணித்துள்ளாா்.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மாடூா் கிராமத்திலுள்ள தனியாா் பால் குளிரூட்டும் நிலையம் அருகே சென்ற போது, டயா் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்புக்கட்டையின் மீது ஏறி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த தலைமைக் காவலா் செல்வியை அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று, சாலையில் கவிழ்ந்து கிடந்த வாகனத்தை கிரேன் உதவியுடன் அகற்றினா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.










