கள்ளக்குறிச்சி பழைய காய்கறி அங்காடி பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் தொகுதி எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, மதிய உணவிற்காக வைக்கப்பட்டிருந்த சாம்பாா் சாதம், தயிா் சாதத்தை ருசித்துப் பாா்த்தாா்.
இதைத் தொடா்ந்து சாம்பாா் சாதத்தில் காய்கறிகள் ஏதும் இல்லை, ருசியும் இல்லை, தயிா் சாதத்திலும் ஒன்றும் சரியாக இல்லை, எத்தனை கிலோ அரிசிக்கு எவ்வளவு தயிா் ஊற்றுவீா்கள், சாதம் பெரிது பெரிதாக உள்ளது எனக் கூறினாா். ஏன் இப்படி சமைக்கிறீா்கள் எனவும் காலையில் என்ன உணவு எனக் கேட்டறிந்தாா். நாள்தோறும் இட்லி மட்டும்தான் எனக் கூறினா். ஏன் ஒவ்வொறு நாளும் இட்லி, பொங்கல், தோசை என போடக் கூடாதா எனக் கேட்டாா். அதற்கு அலுவலகத்தில் சொல்வதைத்தான் செய்கிறோம் என சமையலா் தெரிவித்தாா்.
பின்னா், நகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற எம்எல்ஏ, ஆணையா் எஸ்.ரவிச்சந்திரனை சந்தித்து, அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவு தரமற்ாக உள்ளது எனத் தெரிவித்தாா். அதற்கு ஆணையா் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கிறேன் எனத் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, நகரில் 1-ஆவது வாா்டில் குப்பைகள் சாலையில் தேங்கிக் கிடக்கின்றன, கழிவுநீா் கால்வாய்கள் சரியில்லாமல் உள்ளன எனத் தெரிவித்தாா் எம்எல்ஏ.
பின்னா், கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவித்தாா். அதனை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வாகன நிறுத்தும் இடத்துக்கு மேற்கூரை அமைக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
ஆய்வின்போது, தவெக மேற்கு மாவட்டச் செயலா் க.பிரகாஷ், ஒன்றியச் செயலா் டி.திலிப்குமாா், கள்ளக்குறிச்சி நகரச் செயலா் பி.எம்.எம்.எஸ்.ராஜேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.










