கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இரு நாள்களாக மின்சாரம் தடைபட்டதால் கிராம மக்கள் திங்கள்கிழமை இரவு சாலைமறியலில் ஈடுபட்டனா்.
சங்கராபுரம் அருகேயுள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் கடந்த இருநாள்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மின் கம்பங்கள் சாய்ந்தனவாம். இரு நாள்களாகியும் மின்வாரிய பணியாளா்கள் முழுமையாக சீரமைத்து மின்சாரம் வழங்காததால் திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் கிராம மக்கள் செம்பராம்பட்டு - சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா்கள் அஜித்குமாா், பிரதாப்குமாா் ஆகியோா் மக்களிடம் சமாதானம் பேசி, செவ்வாய்க்கிழமை மின்கம்பங்களை சரிசெய்து, மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவித்ததின் பேரில் மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.










