மேக்கேதாட்டுவில் கர்நாடக அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுவை மாநில 15வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக.26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையாற்றியதைத்தொடர்ந்து, முதல்வர் என். ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து (திங்கள் கிழமை) இன்று காலை 09.34 மணிக்கு சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் திருக்குறள் வாசித்து, பட்ஜெட் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் மேக்கேதாட்டுவில் கர்நாடக அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.