புதுவை சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் பேசும் போது, பாஜக அமைச்சர் சாய் சரவணன்குமார் பேசவிடாமல் குறிக்கீடு செய்ததாகக் கூறி, எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேரும் சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
புதுவை சட்டப்பேரவையின் நிகழாண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமி திங்கள்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்தார். இதனை அடுத்து செவ்வாய்க்கிழமை காலை உறுப்பினர்களின் கேள்வி பதில் விவாதம் நடைபெற்றது.
இதையும் படிக்க.. குரூப் 5ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.
அப்போது திமுக எம்எல்ஏ சம்பத் பேசுகையில், புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை, புறக்கணிப்பதாக விமர்சித்தார். இதனால் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், மத்திய அரசு உதவி வருவதாக அவருக்கு பதில் அளித்து குறுக்கிட்டு பேசினார்.
அமைச்சர் ஆவேசமாக பேசியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு இடையூறு ஏற்படுத்திய அமைச்சரைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா, காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் ஆகியோர் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.