

புதுச்சேரி: புதுச்சேரி உழவர்கரையில் உள்ள புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. சேலம் மாவட்ட முன்னாள் பேராயர் சிங்கராயன் பெருவிழா கொடியேற்றி வைத்து விழாவை துவக்கிவைத்தார்.
புதுச்சேரி உழவர்கரையில் உள்ள புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி காலை 5.30 மணிக்கு ஆலய வளாகத்தில் உள்ள ஜெப மண்டபத்தில் சேலம் மறைமாவட்ட முன்னாள் பேராயர் சிங்கராயன் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.
பின்னர் மாதா உருவம் தாங்கிய கொடி மாதா ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அதனுடன் மாதா சொருபமும் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. அப்போது ஏராளமான கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ பாடல்களை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஆண்டுவிழா கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்புறத்தில் உள்ள கொடிமரத்தில் ஆண்டுவிழா கொடியேற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தனர். இதில் வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலம் அதிபர் பிச்சைமுத்து, பங்குதந்தை ஆரோக்கியநாதன், உதவி பங்குதந்தை ஆரோக்கிய சகாயராஜ், முகையூர் உதவி பங்குத்தந்தை ஜான்சன் மற்றும் பலர் இருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து நவ நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரைகள், தேர்ப்பவனி போன்றவை நடைபெற உள்ளன. வருகிற 15-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.