புதுவை மின் துறை தனியார் மய விவகாரம்: காரைக்காலில் கடையடைப்புப்  போராட்டம்

புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து  காரைக்காலில் செவ்வாய்க்கிழமை கடையடைப்புப்  போராட்டம் நடைபெறுகிறது.
புதுவை மின் துறை தனியார் மய விவகாரம்: காரைக்காலில் கடையடைப்புப்  போராட்டம்

காரைக்கால்:  புதுவையில் மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின் கணக்கீட்டு மீட்டரை பிரீ பெய்டு மீட்டராக மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்  காரைக்காலில் செவ்வாய்க்கிழமை கடையடைப்புப்  போராட்டம் நடைபெறுகிறது.

புதுவை யூனியன் பிரதேசத்தில் மின் துறையை தனியார்  மயமாக்கும் நடவடிக்கையை எதிர்த்தும், மின் கணக்கீட்டு மீட்டரை பிரீ பெய்டு மீட்டராக மாற்ற  எடுத்துள்ள முடிவை எதிர்த்தும், குப்பை வரி வசூலிப்பை ரத்து செய்து அரசு அறிவித்தும் நகராட்சி நிர்வாகத்தினர் வசூல் செய்வதை கண்டித்தும் காரைக்கால் மக்கள் போராட்டக் குழு செவ்வாய்க்கிழமை கடையடைப்புப்  போராட்டத்துக்கு அழைப்புவிடுத்தது.

இதற்கு விடுதலை சிறுத்தைகள், எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட சில கட்சிகள், பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. காரைக்கால் மாவட்டத்தில்  சேம்பர் ஆஃப் காமர்ஸ் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக கடைகள்  திறக்கப்படுமெனவும், தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு காவல் துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

போராட்ட நாளான செவ்வாய்க்கிழமை  காரைக்கால் நகரில் பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டன. உணவகம், டீ கடை, பூ வியாபாரம், காய்கறி கடைகள் திறக்கப்பட்டிருந்தன. 

இதுகுறித்து காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.டி.அன்சாரிபாபு கூறுகையில், வழக்கமாக காலை 9 மணிக்கு திறக்கக்கூடிய கடைகளில் 80 சதவீதத்துக்கு மேல் திறக்கப்படவில்லை. போராட்டத்துக்கு ஆதரவு இருப்பது தெரிகிறது. திறக்கும் கடைகளை மூடுமாறு வற்புறுத்தக்கூடாது என காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன்பேரில், போராட்ட அழைப்போடு நாங்கள் நிறுத்திக்கொண்டோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com