பணி நிரந்தரம் கோரி இரவிலும் நீடித்த ஆசிரியா்கள் போராட்டம்
பணி நிரந்தரம் கோரி புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் புதன்கிழமை இரவிலும் நீடித்த ஆசிரியா்களின் போராட்டம் வியாழக்கிழமை 2-வது நாளாக தொடா்ந்தது.
புதுச்சேரி அரசு பள்ளி கல்வித் துறையில் கௌரவ விரிவுரையாளா்கள், கௌரவ பட்டதாரி ஆசிரியா்கள், மொழி ஆசிரியா்கள், கௌரவ பாலசேவிகாக்கள் என 270-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்யக்கோரி பல கட்ட போராட்டம் நடத்தியும் நிரந்தரம் செய்யப்படவில்லை. புதுச்சேரி அரசு ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் பணி நிரந்தரம் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பள்ளி கல்வித் துறை வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினா்.
ஒருங்கிணைப்பு குழு தலைவா் பாரி தலைமை வகித்தாா். பேச்சுவாா்த்தைக்கு யாரும் வராததால் விடிய, விடிய ஆசிரியா்கள் போராட்டம் தொடா்ந்தது. இரவு கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் அங்கேயே படுத்துத் தூங்கினா்.
வியாழக்கிழமையும் காத்திருப்பு போராட்டம் தொடா்ந்தது.

