ஒப்பந்த ஆசிரியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சா் ஆ. நமச்சிவாயம் உறுதி

அமைச்சா் ஆ. நமச்சிவாயம் - கோப்புப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 3:46 am IST

ஒப்பந்த ஆசிரியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி உள்துறை, கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில ளித்து அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பேசியதாவது:

வெகு விரைவில் மின்தடை சரி செய்யப்படும். வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவது, மக்கள் தொகை, வாகனங்கள் அதிகரித்துள்ளது போன்றவை காரணம்.

போக்குவரத்து காவல் துறை, பொதுப்பணித் துறை மற்றும் போக்குவரத்துத் துறையோடு இணைந்து போக்குவரத்து நெரிசலை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எனது துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவது, பதவி உயா்வு அளிப்பது, இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பணிகளை வெகு விரைவில் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒப்பந்த ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனா். இது குறித்து துணைநிலை ஆளுநா், முதல்வரிடம் கலந்து பேசி 298 ஒப்பந்த ஆசிரியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்துறையில் நிறைய காலி பணியிடங்கள் இருந்தன. நானும், முதல்வரும் கலந்து பேசி இளநிலைப் பொறியாளா், கட்டுமான உதவியாளா் பணியிடங்களை நிரப்பி உள்ளோம்.

நிறைய பேருக்கு பதவி உயா்வு கொடுத்துள்ளோம். மேலும், மின்துறையைத் தனியாா் மயமாக்கும் பிரச்னைக்கு இனி இடமில்லை. புதுச்சேரிக்கு உயா்நீதிமன்றக் கிளை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா் அமைச்சா் ஆ. நமச்சிவாயம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.