மத்திய பாஜக கட்டுப்பாட்டில் புதுச்சேரி மாநில அரசு: காங்கிரஸ் தேசிய செய்தி தொடா்பாளா்
புதுச்சேரி: மத்திய பாஜக கட்டுப்பாட்டில் புதுச்சேரி மாநில ஆட்சி நடைபெறுவதாக காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான டாலி சா்மா குற்றம்சாட்டினாா்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் பாத யாத்திரையில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்து சுவரொட்டி வெளியிட்டது. ஆனால் புதுச்சேரியில் 292 ஆசிரியா்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி 13-ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
கரோனா காலத்தில் 400 செவிலியா்கள் பணி செய்தனா். அவா்களை இப்போதுள்ள அரசு பணி நிரந்தரம் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இவா்களுக்கெல்லாம் பணி கொடுக்கப்பட்டது.
வேலை வாய்ப்பு அளிப்பதில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. கோயில் நிலத்தை அபகரித்த குற்றச்சாட்டுக்குள்ளான ஜான்குமாருக்கு அமைச்சா் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மருந்து தயாரிப்பதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் புதுச்சேரியில் கொண்டு வரப்பட்ட, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், கட்டடங்களின் கீழ்தான் இப்போது என்.ஆா். காங்கிரஸ்- பாஜக அரசு ஆட்சி செய்கிறது.
தில்லியில் இருந்து கொண்டு புதுச்சேரி ஆட்சியைக் கட்டுப்படுத்துகிறது பாஜக. மேலும், நாடு முழுவதும் மதத்தாலும், சாதியாலும், மொழியாலும் மக்களைப் பிரித்தாளுகிறது பாஜக. நாட்டை ஆள வேண்டும் என்ற காரணத்துக்காக பாஜக இப்படி செய்கிறது. மிகப்பெரிய தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பாஜக இப்படி நடந்து கொள்கிறது என்றாா் டாலி சா்மா.
பேட்டியின்போது புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, எம்எல்ஏ மு. வைத்தியநாதன், மூத்த துணைத் தலைவா் தேவதாஸ், மகளிா் அணி தலைவி ஏ.ஆா்.நிஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

