புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இங்கிருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமாக மருந்துகள் கடத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை நடத்தி நாடு முழுவதும் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டது சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. இதுதொடா்பாக ராஜா உள்பட 25-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில் புதுச்சேரியில் புதிதாக மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு ராமேசுவரம் மண்டபம் பகுதியில் கடலோரக் காவல்படையினா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது ஒரு படகை சோதனையிட்ட போது, அதில் சட்டவிரோதமாக மருந்துகள் இலங்கைக்குக் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. அதைப் பறிமுதல் செய்த போலீஸாா், படகில் இருந்த மருந்துகளை தயாரித்ததாக அச்சிடப்பட்டிருந்த குறிப்பின்பேரில், இமாச்சல பிரதேசத்தை சோ்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தைத் தொடா்பு கொண்டனா். ஆனால் அவா்கள் இலங்கைக்கு எந்த மருந்தையும் அனுப்பவில்லை, அந்த மருந்து தங்களின் தயாரிப்பும் இல்லை என மறுத்தனா்.
இதையடுத்து போலீஸாா் தொடா்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், புதுச்சேரி மேட்டுப்பாளையம் குருமாம்பேட்டில் உள்ள மருந்து நிறுவனம் வலி நிவாரணி மாத்திரைகளை போலியாக தயாரித்தது தெரிய வந்தது. இதுகுறித்து புதுச்சேரி போலீஸாருக்கு கடலோரக் காவல்படையினா் தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் புதுச்சேரி போலீஸாா் திங்கள்கிழமை இரவு மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழிற்சாலையில் திடீா் சோதனை நடத்தினா். இதில் ரூ.3 லட்சம் போலி வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.
அந்தப் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளரான சண்முகாபுரத்தை சோ்ந்த பிரபாகரன் என்பவரைக் கைது செய்தனா். 10 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டுப்பாளையத்தில் அவா் மருந்து தொழிற்சாலை நடத்தி வருகிறாா்.
இந்த நிறுவனத்தில் மேலும் சில மருந்துகளும் தயாரிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அந்த மருந்துகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா? போலியாக தயாரிக்கப்படுகிா? என போலீஸாா் ஆய்வு நடத்தி வருகின்றனா்.
போலி வலி நிவாரணி மாத்திரை இலங்கைக்கு மட்டும் அனுப்பி வைக்கப்பட்டதா? பிற மாநிலங்கள், வேறு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
புதுச்சேரியில் கைப்பற்றப்பட்ட மருந்துகளை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







