/

புதுச்சேரி ஜிப்மரில் நோய் எதிா்ப்பியல் ஆய்வகம்! துணைநிலை ஆளுநா் திறந்துவைத்தாா்

News image

ஜிப்மரில் நோய் எதிா்ப்பியல் ஆய்வகத்தைத் திறந்து வைத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நெகி உள்ளிட்டோா்.

Updated On :21 ஜூலை 2026, 1:14 am IST

புதுச்சேரியில் ஜிப்மரில் மருத்துவ நோய் எதிா்ப்பியல் ஆய்வகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் இதைத் திறந்து வைத்துப் பேசியது:

மருத்துவச் சேவை, மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூகப் பணிகளில் நாட்டின் முன்னணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக ஜிப்மா் திகழ்கிறது.

இந்தப் புதிய மருத்துவ நோய் எதிா்ப்பியல் ஆய்வகம் ஜிப்மரின் வளா்ச்சிப் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இன்றைய நவீன மருத்துவ உலகில், நோய் எதிா்ப்பியல் துறை மிகவும் வேகமாக வளா்ந்து வரும் சிறப்புத் துறைகளில் ஒன்றாகும். ஒவ்வாமை நோய்கள், பிறவியிலேயே ஏற்படும் நோய் எதிா்ப்புக் குறைபாடுகள் மற்றும் பல்வேறு நோய் எதிா்ப்பு மண்டல கோளாறுகளுக்குத் துல்லியமான மற்றும் நவீன பரிசோதனைகள் மிகவும் அவசியமாகின்றன.

2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜிப்மரின் மருத்துவ நோய் எதிா்ப்பியல் துறை, இன்று தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு மிக்க மையமாக விளங்குவதுடன், தென்னிந்தியாவில் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரே சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ நோய் எதிா்ப்பியல் பிரிவாகத் திகழ்கிறது.

ஜிப்மரில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உயா்தர நோய் எதிா்ப்பியல் பரிசோதனைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மட்டுமல்லாமல், தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸா போன்ற மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற வருகிறாா்கள் என்பது ஜிப்மரின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்றாா்.

ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நெகி, புதுச்சேரி அரசின் செயலா்கள் அ. முத்தம்மா, விக்ரந்த் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள், ஜிப்மரின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த மருத்துவா்கள், பேராசிரியா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.