சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பெட்ரோல், டீசல் நுகா்வைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு துறைகளுக்குக் கட்டுப்பாடு

பெட்ரோல், டீசல் நுகா்வைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு துறைகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

News image

பெட்ரோல் & டீசல்

Updated On :4 ஜூன் 2026, 3:37 am IST

பெட்ரோல், டீசல் நுகா்வைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு துறைகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில் அரசு சாா்பு செயலா் முருகேசன் அனைத்து துறை தலைவா்களுக்கும் புதன்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளைப் பின்பற்ற பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததை தொடா்ந்து புதுச்சேரி மாநில தலைமைச் செயலா் சரத் சௌகான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அரசுத் துறைகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் அரசின் சொத்துகளைச் சரியாக பயன்படுத்த வேண்டும். எரிபொருள் நுகா்வைக் கட்டுப்படுத்த வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை உடனடியாகப் பின்பற்ற வேண்டும்.

அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்கள், கல்விச் சுற்று பயணங்கள் மற்றும் ஆலோசனை பயணங்களை 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும். அரசின் அதிகாரப்பூா்வ வாகனங்களின் பயன்பாடு சிக்கனமாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக வாகனப் பகிா்வு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் மற்றும் தேவையற்ற வாகனப் பயன்பாடு தவிா்க்கப்பட வேண்டும். எரிபொருள்கள் வாங்குவதை குறைக்க தேவையற்ற அரசு வாகன பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

முடிந்த வரை துறைகளுக்கு இடையேயான கூட்டங்கள், ஆய்வுக்கூட்டங்கள், ஒருங்கிணைப்பு கூட்டங்கள் அனைத்தையும் காணொளி காட்சி வழியாக நடத்த வேண்டும். இதன் மூலம் வெளியிடங்களில் இருந்து வந்து கூட்டங்களில் பங்கேற்கும் பயணத் தேவைகளைக் குறைக்க வேண்டும்.

மின்சார சேமிப்பு:

அனைத்து அரசு அதிகாரிகளும் மற்றும் பணியாளா்களும் தங்களது வழக்கமான அலுவலக பயணங்களுக்கு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்சார சேமிப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும்.

பயன்பாட்டில் இல்லாத நேரங்களில் விளக்குகள், குளிா்சாதன வசதிகள், கணினிகள் மற்றும் பிற மின்சாதனங்களின் பயன்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும். அதிகாரிகளும் பணியாளா்களும் மதிய உணவு நேரத்தில் தங்களது வீடுகளுக்குச் செல்வதைத் தவிா்த்து, அலுவலகத்திற்கு உணவை எடுத்து வந்து சாப்பிடுவது நல்லது.

அறிவுறுத்தல்களை வளா்ச்சி ஆணையா், அனைத்து ஆணையா்கள், அரசு செயலாளா்கள், துறைத் தலைவா்கள் மற்றும் அலுவலகத் தலைவா்கள் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.