திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு, சொத்துக் குவிப்பு வழக்குகளின் விசாரணையை வருகிற மார்ச் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
கடந்த திமுக ஆட்சியின் போது, விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறையில் செம்மண் குவாரி நடத்தியதில் அரசுக்கு ரூ.28.37 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அவரது மகன் கெüதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு, விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜெயச்சந்திரன், கோதகுமார், லோகநாதன், கோபிநாத், சதானந்தம் ஆகியோர் ஆஜராகினர். க.பொன்முடி, அவரது மகன் கௌதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகியோர் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) யு.மோனிகா, விசாரணையை வருகிற மார்ச் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சொத்துக் குவிப்பு வழக்கு: இதேபோல க.பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் விசாரணையும் இதே நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு, புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதில், க.பொன்முடி, விசாலாட்சி இருவரும் ஆஜராகவில்லை.
இதுதொடர்பாக அவரது வழக்குரைஞர்கள் டி.எஸ்.சுப்பிரமணியன், ஏழுமலை, ராஜா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி யு.மோனிகா, விசாரணையை மார்ச் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.