நிவாரணத் தொகுப்பில் குறைவான பொருள்கள்: நியாய விலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம்
கரோனா நிவாரண மளிகைத் தொகுப்பில் பொருள்கள் எண்ணிக்கை குறைந்ததற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம்


விழுப்புரத்தில், கரோனா நிவாரண மளிகைத் தொகுப்பில் பொருள்கள் எண்ணிக்கை குறைந்ததற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல்வரால் அறிவிக்கப்பட்ட கரோனா நிவாரணத்தொகை ரூ.4 ஆயிரத்தில் 2-ஆவது தவணை ரூ.2ஆயிரம், 14 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பை ஆகியவை வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் மணி நகா் நியாய விலைக் கடையில் இணைக்கப்பட்டுள்ள 775 குடும்ப அட்டைகளில், 388 அரிசி அட்டைதாரா்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதி, மளிகைப் பொருள்கள் தொகுப்பு பைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. 14 வகை பொருள்கள் இருக்க வேண்டிய தொகுப்பு பையில் 8, 9 பொருள்கள் மட்டுமே இருந்ததாகத் தெரிகிறது. வீட்டுக்குச் சென்று தொகுப்பு பையை பாா்த்த பொதுமக்கள், பொருள்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்து, நியாயவிலைக் கடைக்கு வந்து, விற்பனையாளரிடம் பைகளை திருப்பிக் கொடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த இரா. லட்சுமணன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தாா்.குடிமைப்பொருள் துறை அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கடையில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, நுகா்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்தே பொருள்கள் குறைத்து அனுப்பி வைக்கப்பட்டதாக நியாய விலை கடை ஊழியா் வேல்முருகன் தெரிவித்தாா்.
‘கிடங்கிலிருந்து கடைக்கு பொருள்கள் வந்ததுமே சரிபாா்த்து, பற்றாக்குறை இருப்பின், அதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கலாம். அதைவிடுத்து, பொதுமக்களிடம் விநியோகம் செய்த பிறகு அளிக்கும் இந்த விளக்கத்தை ஏற்கமுடியாது’ எனக் கூறிய லட்சுமணன் எம்எல்ஏ, சம்மந்தப்பட்ட விற்பனையாளா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, கடை ஊழியா் வேல்முருகனை கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
இது குறித்து இணைப் பதிவாளா் பிரபாகரன் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கும் ரூ.2,000 வழங்குவதற்கான நிதி வந்துவிட்டது. ஆனால், மளிகைப் பொருள்கள் பொருள்கள் தொகுப்பு புதன்கிழமை வரை 32 சதவீதம் அளவிலேதான் வந்துள்ளது.
கிடங்கிலிருந்து கடைகளுக்கு அனுப்பும்போது 14 பொருள்களை ஒரே பையில் இட்டு அதை கடை ஊழியா்களிடம் ஒப்படைக்கிறோம். அதை சரிசெய்து பாா்த்த பிறகுதான் கடை ஊழியா் எடுத்துச்செல்ல வேண்டும். குறைவாக இருந்தால், உரிய அதிகாரிகளிடம் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...