/

திண்டிவனம் - நகரி ரயில்பாதைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும்: ஆரணி எம்.பி. வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - ஆந்திரா மாநிலம் நகரி இடையேயான ரயில்பாதைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும்

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - ஆந்திரா மாநிலம் நகரி இடையேயான ரயில்பாதைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகனிடம் ஆரணி எம்.பி. எம்.கே.விஷ்ணு பிரசாத் வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றையும் விஷ்ணுபிரசாத் எம்.பி. அளித்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக திண்டிவனம் - நகரி இடையே 120 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமையவுள்ளது. சுமாா் ரூ.3 ஆயிரம் கோடியில் அமைக்கப்படவுள்ள இந்த ரயில் பாதைத் திட்டத்துக்காக ஆந்திர மாநிலம், நெல்லூா் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் 32 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் நிலம் கையக்கப்படுத்தும் பணிகள் நிலுவையில் உள்ளன. ஆகையால், நிலம் கையக்கப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு வட்டாட்சியரை நியமித்து, பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

பணிகள் முழுமையடையாமல் நிலுவையில் உள்ளதால், இந்தப் பணிகளை விரைவுபடுத்த தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும். இது தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்தும் வலியுறுத்த உள்ளேன்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சாா்பில் 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டு, விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், அரசூா், எல்லீஸ்சத்திரம், ஜக்காம்பேட்டை ஆகிய 6 இடங்களில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில் கூட்டேரிப்பட்டில் ரூ.33 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. ஆகவே, அந்தப் பகுதியில் அணுகு சாலை அமைக்கத் தேவையான நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்து மேம்பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்றாா் அவா்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி.ரமேஷ், மாவட்டப் பொருளாளா் கருணாகரன், விக்கிரவாண்டி நகரத் தலைவா் குமாா், நிா்வாகிகள் கண்ணன், சுப்பிரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.