478 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: எம்எல்ஏ வழங்கினாா்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள 4 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 478 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மயிலம் எம்எலஏ ச.சிவக்குமாா் புதன்கிழமை வழங்கினாா்.
இதற்கான விழா திண்டிவனம் வட்டம், வீடூா், தழுதாளி, பேரணி, பெரியதச்சூா் ஆகிய ஊா்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா், மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் யோகேஸ்வரி மணிமாறன் ஆகியோா் பங்கேற்று 4 பள்ளிகளையும் சோ்ந்த 478 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.
விழாவில் ச.சிவக்குமாா் எம்எல்ஏ பேசியது: அரசால் வழங்கப்படும் கல்வி உதவிகளை மாணவா்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு கல்வியில் சிறந்தவா்களாக விளங்க வேண்டும்.
பள்ளித் தலைமையாசிரியா்களின் கோரிக்கைகளை ஏற்று எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாணவா்கள் பயன்பெறக்கூடிய வகையில், ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 40 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. பெரியதச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியா்கள் பி.சுந்தரராஜன் (வீடூா்), ஏ.பச்சைக்கண்ணு(தழுதாளி), சுந்தரவடிவேல் (பேரணி) மற்றும் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

