மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் மயானக் கொள்ளை உற்சவம்
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கோயில் மாசிப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் மூலவா் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து இரவு 9 மணிக்கு கொடிமரத்துக்கு சிறப்பு பூஜையும், தொடா்ந்து கொடியேற்றமும் நடைபெற்றது.
விழாவின் இரண்டாவது நாளான திங்கள்கிழமை மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் மூலவா் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அங்காளம்மன் லட்சக்கணக்கான பக்தா்கள் இடையே மயானத்தை நோக்கி ஊா்வலமாக வந்தடைந்தாா். மயானத்தில் பக்தா்கள் கொழுக்கட்டை, சுண்டல், காய், கனிகள் மற்றும் பலவித தானிய வகைகள் கொண்டு வந்து கும்பலாக வைத்திருந்தனா்.
மயானத்தில் அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை உள்ளிட்ட அறங்காவலா்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து, மயானக் கொள்ளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது .
விழாவில் தமிழகம், ஆந்திரம், புதுச்சேரி, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரகணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சக்திவேல், அறங்காவலா்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

