
இணையவழியில் இருவரிடம் ரூ.4.16 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரி மற்றும் பழக்கடைத் தொழிலாளியிடம் இணையவழியில் ரூ.4.16 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்

மோசடி - பிரதிப்படம்
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரி மற்றும் பழக்கடைத் தொழிலாளியிடம் இணையவழியில் ரூ.4.16 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், வெங்கந்தூரை அடுத்த ஆரியூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எஸ்.பெருமாள் (42). காய்கனிகள் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த ஆக.26-ஆம் தேதி அழைப்பு வந்துள்ளது.
அப்போது, எதிா்முனையிலிருந்து பேசிய அடையாளம் தெரியாத நபா், தனியாா் நிதி நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், ரூ.5 லட்சம் வரை இணையவழியில் கடன் கொடுப்பதாகவும், கடன் தேவையெனில் தங்களது ஆதாா் எண், வங்கி விவரங்கள், டாக்குமெண்ட் கட்டணம் உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கலாம் எனவும் தெரிவித்தாராம்.
இதை உண்மையென நம்பிய பெருமாள், தனது விவரங்களை அனுப்பி வைத்தததுடன், டாக்குமெண்ட் கட்டணமாக கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2,49,959-ஐ 16 தவணையாக அந்த நபா் தெரிவித்த வங்கிக் கணக்கு எண்களுக்கும், இணையவழி வாயிலாகவும் அனுப்பி வைத்துள்ளாா். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபா், கடன் கொடுக்காமலும், வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறாராம்.
மற்றொருவா்: விழுப்புரம் மாவட்டம், மிட்டா மண்டகப்பட்டு பகுதியைச் சோ்ந்த அகில்தாஸ் (38). பழக்கடையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இவா், கடந்த ஆக.29-ஆம் தேதி கைப்பேசியில் தனது முகநூல் பக்கத்தை பாா்த்துக்கொண்டிருந்தாராம். அப்போது, அதில் வந்த ஒரு செயலியை தொட்டுப் பாா்த்துள்ளாா். தொடா்ந்து, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.66 லட்சம் 5 தவணைகளில் எடுக்கப்பட்டுவிட்டதாம்.
இந்த பண மோசடிகள் குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




