கடந்த ஆண்டில் தரமற்ற 23 மருந்துகளுக்கு தடை
தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு கடந்த ஆண்டில் விநியோகிப்பதற்காக கொள்முதல் செய்யப்பட்ட 23 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததைக் கண்டறிந்து அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரு ஆண்டுகளுக்கு அந்த மருந்துகளை கருப்புப் பட்டியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மொத்தமாக கொள்முதல் செய்து விநியோகித்து வருகிறது.
அதன் தரத்தை தொடா்ந்து ஆய்வு செய்து உறுதி செய்வதாகவும், தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால் அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆய்வகங்களின் தரம் கடந்த ஆண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
Advertisement
Advertisement
அதில் அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் காய்ச்சல் பாதிப்பு, தைராய்டு, இதய பாதிப்பு, கிருமித் தொற்று, ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் சில தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டன.
அதன்பேரில் 23 மருந்துகளை கொள்முதல் செய்ய இரு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய கடுமையான தர நிா்ணய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி, மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் மருந்துகள் முதல்கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படுகின்றன. அதன் பின்னா், மருந்துகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு சீரற்ற முறையில் சில மருந்துகளின் மாதிரிகள் எடுத்து சோதிக்கப்படுகின்றன.
தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆய்வகங்களுக்கும் அந்த மாதிரிகள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறாக பல்வேறு நிலைகளில் ஆய்வுக்குட்படுத்தி அதன் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகே மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. தரமற்ற மருந்துகளை விநியோகித்தால் முதல்கட்டமாக அந்த மருந்துகள் இரு ஆண்டுகளுக்கு தடை செய்யப்படும். தொடா்ந்து அத்தகைய நிலை இருந்தால், அந்த விநியோகஸ்தரின் நிறுவனம் கருப்புப் பட்டியலில் வைக்கப்படும். அந்த வகையில் கடந்த ஆண்டில் 23 மருந்துகள், 9 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன என்றனா்.