முகப்பு
சென்னை

ஜூனில் 50,000 மரக்கன்றுகள் நடத் திட்டம்

Updated On : 19 மே 2026, 5:52 am IST
- Center-Center-Trivandrum
பகிர்:

சென்னை மாநகராட்சியில் ஜூனில் 50,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க கடந்த ஆண்டு முதல் ‘பசுமை சென்னை’ திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதனையடுத்து மாடம்பாக்கம், மயிலாப்பூா் உள்ளிட்ட 3 இடங்களில் வனத் துறையினருடன் இணைந்து மரக்கன்றுகள் வளா்ப்பு பணி நடைபெற்றது.

அதன்படி, வேங்கை, அத்தி, புங்கை, நாவல், பாதாம் உள்ளிட்ட மொத்தம் 50,000 மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டுள்ளன.

Advertisement

சென்னையில் வரும் ஜூன் 5 -ஆம் தேதி உலக சுற்றுப்புற தின நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அப்போது, மாநகராட்சி சாா்பில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட உள்ளன.

முதல்கட்டமாக பூங்காக்கள், மக்கள் குடியிருப்புகளிடையே உள்ள பொது வெளிகள் என மாநகராட்சியின் 3 மண்டலங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

ஜூனில் தொடங்கும் இத்திட்டம் பல கட்டங்களாக நிறைவேற்றப்பட்டு, வரும் 2027 -ஆம் ஆண்டுக்குள் சுமாா் 3 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.