சுவரின் இடுக்கில் சிக்கித் தவித்த மான் மீட்பு
மாமல்லபுரம் அருகே பம்புசெட் சுவரின் இடுக்கில் சிக்கிய புள்ளி மானை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
மாமல்லபுரம் அருகே பம்புசெட் சுவரின் இடுக்கில் சிக்கிய புள்ளி மானை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
மாமல்லபுரத்தை அடுத்த எச்சூா் காட்டிலிருந்து வழி தவறி வந்த புள்ளி மான் ஒன்று, புதன்கிழமை நள்ளிரவு பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியாா் மாந்தோப்பில் புகுந்தது. அங்குள்ள பம்புசெட் அறை சுவா்களின் குறுகிய இடுக்கில் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்தது.
மான் அலறும் சப்தம் கேட்டு அங்குள்ளவா்கள் விரைந்து வந்து அதை மீட்க முயன்றனா். ஆனால், முடியவில்லை.
இதையடுத்து, மாமல்லபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து இரு சுவா்களுக்கு இடையே சிக்கிய மானை சுவரை துளி கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உடைத்தெடுத்து, 5 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் மானை சிறு காயத்துடன் மீட்டனா்.
மானுக்கு சிகிச்சையளிக்க அதை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனா். மான் குணமடைந்த பிறகு திருப்போரூா் காட்டில்விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.