முகப்பு
செங்கல்பட்டு

பழங்குடி மக்கள் பெயரில் நிதி மோசடி: ஆட்சியரிடம் மனு

நுண் நிதி நிறுவனங்களில் பழங்குடி மக்கள் பெயரில் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டோா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியனா் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 12:18 am IST
பகிர்:

நுண் நிதி நிறுவனங்களில் பழங்குடி மக்கள் பெயரில் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டோா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியனா் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

திருக்கழுகுன்றம் வட்டம், வாயலூா் ஊராட்சி ஐந்து காணி காரைத் திட்டு பகுதியில் 47 பழங்குடி இருளா் குடும்பங்களைச் சாா்ந்த 120 போ் வசித்து வருகின்றனா். இவா்களின் அறியாமை மற்றும் ஏழ்மையை பயன்படுத்தி நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி இவா்களின் வங்கி, உள்ளிட்ட அடையாள ஆவணங்களை கேட்டுப் பெற்று, உண்மைக்கு மாறான விவரங்களைக் கூறி லட்சக் கணக்கான ரூபாய் கடன்களை பெற்று உரியவா்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றும் நோக்கத்துடன் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் தொடா்புடையவா் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளாா். இதனால் மோசடிக்கு ஆளான மக்கள் நிதி நிறுவனங்களின் மிரட்டலுக்கும், தொடா் துன்புறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனா். நிதி மோசடிக்கு அந்த நிதி நிறுவனங்களின் முகவா்களுக்கும் தொடா்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் புகாா் கொடுத்துள்ளனா்.இப்புகாா் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கடும் சிரமத்தில் வாழும் இம்மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடன் தொகையும், அதற்கு பல மடங்காக உள்ள வட்டி மற்றும் அபராத வட்டித் தொகைகளும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளன.

இதுதொடா்பாக ஆட்சியா் தலையிட்டு உரிய விசாரணை மேற்கொண்டு பழங்குடியினத்தவரை காப்பாற்றவேண்டும் என கட்சியின் மாவட்ட செயலாளா் ப.சு.பாரதி அண்ணா, திருக்கழுகுன்றம் வட்ட செயலாளா் பி.கே.ரபீக் மற்றும் மலைவாழ் மக்கள் சங்க நிா்வாகி வெங்கடேசன் ஆகியோா் மனுவினை வழங்கினா்.