கண்ணகி நகரில் மின் கணக்கு அளவிட முடிவதில்லை: திமுக கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்
சென்னை கண்ணகிநகர் பகுதியில் மின் கணக்கை அளவிட முடியாமல் பணியாளர்களுக்கு அந்தப் பகுதி மக்களே இடையூறு ஏற்படுத்துவதாக
சென்னை கண்ணகிநகர் பகுதியில் மின் கணக்கை அளவிட முடியாமல் பணியாளர்களுக்கு அந்தப் பகுதி மக்களே இடையூறு ஏற்படுத்துவதாக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, சோழிங்கநல்லூர் தொகுதியில் புதைவட மின் கேபிள்கள் அமைப்பது குறித்து அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் கேள்வி எழுப்பினார். அதற்கு, அமைச்சர் தங்கமணி அளித்த பதில்:
உயர் மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகள் செல்லக் கூடிய பகுதிக்கு அருகிலேயே குடியிருப்புகளை கட்டி விடுகிறார்கள். இதன்பிறகு, அந்தக்ம்பிகளை அகற்றக் கோருகிறார்கள். சென்னை நகரம் முழுவதும் மின் கம்பிகளுக்குப் பதிலாக பூமிக்கு அடியில் புதைவடங்களாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 6 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 6 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன.
கண்ணகி நகரில் மின்கட்டணப் பிரச்னை பற்றி உறுப்பினர் கருத்துத் தெரிவித்தார். ஆனால், அந்த நகரில் மின் கட்டணத்தை அளவிடவே பணியாளர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மக்கள் குழுவாகச் சூழ்ந்து கொண்டு பணியாளர்களைப் பணி செய்ய விடுவதில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அளவிடும் பணியை மேற்கொள்ள அனுமதித்தாலே எந்தப் பிரச்னையும் இருக்காது. எனவே, மின்வாரிய அலுவலர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.