என்னைக் கவர்ந்த புத்தகங்கள்!
எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா:எனக்குப் பிடித்த புத்தகங்களில் முதன்மையானது ராகுல
எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா:
எனக்குப் பிடித்த புத்தகங்களில் முதன்மையானது ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை . என் சமயம் சார்ந்த, சமூகம் சார்ந்த பல சிந்தனைகளை மாற்றியது, உருவாக்கியது அந்த நூலே. ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன் நாவல் என்னை உலுக்கிய நாவல். அதில் வரும் ஹென்றி மாதிரி வாழ வேண்டும் என்று ஒரு சமயம் ஆசை வரும். இன்னொரு சமயம் அதில் வரும் துரைக்கண்ணு போல வாழ ஆசை வரும்.
எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம், ஜெயமோகனின் காடு எனக்குப் பிடித்த புத்தகங்கள். யாமம் நாவலைப் படிக்கும் முன்பு இரவுகள் என்னைப் பயமுறுத்தும். மனதில் கலவரம் தோன்றும். அதைப் படித்தபிறகு, இரவு ஓர் அற்புத விஷயம் என்பதை உணர முடிந்தது.
நான் காடுகளுக்குள் சென்றதில்லை. கான்கிரீட் காடுகளில் வளர்ந்தவள். ஜெயமோகனின் காடு எனக்கு காடுகளுக்குள் சென்ற அனுபவத்தைக் கொடுத்தது. கல்பற்றா நாராயணனின் கவித்துவமான நாவல் யித்ரமாத்ரம் அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் வரும் கதாநாயகி புலம்பி அழுவாள். அதே சமயம் அவள் மிகவும் உயர்வாகச் சித்திரிக்கப்பட்டிருப்பாள்.
மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதி கே.எம்.ஜெயஸ்ரீ தமிழில் மொழிபெயர்த்த நூல் நிலம் பூத்து மலர்ந்த நாள். சங்க காலப் பாரிமன்னனின் கதையைச் சொல்லும் நூல். சங்க இலக்கிய காலத்தை கவிதைத் தன்மையுடன் சித்திரிக்கும் நூல் என்பதால் எனக்கு மிகவும் பிடித்தமான நூல் அது.
தமிழ்நதியின் பார்த்தீனியம் மிகவும் வலியைத் தந்த நாவல் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.