மனைவியைக் கொன்று கணவர் தற்கொலை
சென்னை புளியந்தோப்பில் குடும்பப் பிரச்னையின் காரணமாக மனைவியை கொலை செய்துவிட்டு, கணவர் தற்கொலை செய்து
சென்னை புளியந்தோப்பில் குடும்பப் பிரச்னையின் காரணமாக மனைவியை கொலை செய்துவிட்டு, கணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியந்தோப்பு திரு.வி.க.நகர் மசூதி தெருவைச் சேர்ந்தவர் கா.துக்காராம் (42). இவர் மனைவி தாராபாய் (33). இத் தம்பதிக்கு சஞ்சய்ராம் (14), அனுமந்த்ராம் (12), ஸ்ரீராம் (10) என 3 மகன்கள் உள்ளனர். துக்காராம், போரூரில் ஒரு காலணிக் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். தாராபாய், வில்லிவாக்கத்தில் ஒரு காய்கறி கடையில் வேலை செய்து வந்தார்.
அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சஞ்சய்ராம் 9-ஆம் வகுப்பும், அனுமந்த்ராம் 7-ஆம் வகுப்பும், ஸ்ரீராம் 5-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் துக்காராம், தனது மனைவி தாராபாய் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு, அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இதனால் அவர்களது குடும்பத்தில் பிரச்னை இருந்து கொண்டே இருந்ததாம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த துக்காராம், தனது மனைவி தாராபாயிடம் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே துக்காராம் அங்கு கிடந்த ஆட்டு கல்லை எடுத்து தாராபாய் தலையில் போட்டு கொலை செய்தார். பின்னர் துக்காராம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டின் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த அந்த தம்பதியின் மூன்று மகன்களும் புதன்கிழமை காலை எழுந்து பார்த்தபோது தனது தாய், தந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அழுதனர்.
அவர்களது அழுகை சத்ததைக் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டினர் அங்கு வந்து பார்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, இருவர் சடலத்தையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.