பூர்வகுடி வீராங்கனைக்கு தனது உலகக் கோப்பை டிக்கெட்டை பரிசளித்த மெக்சிகோ அதிபர்!
கவனம் பெறும் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷேன்பாமின் செயல் குறித்து...
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷேன்பாம் தனது கால்பந்து உலகக் கோப்பைக்கான டிக்கெட்டை அந்த நாட்டின் பூர்வகுடியைச் சேர்ந்த வீராங்கனை யோலெட் செர்வாண்டஸுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஆளுங்கட்சியான மொரேனா கட்சி (இடதுசாரி) சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கிளாடியா ஷேன்பாம், ஏறக்குறைய 60 சதவீத வாக்குகளைப் பெற்று, அசைக்க முடியாத முன்னிலையுடன் வெற்றி பெற்றார். மெக்சிகோவின் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக 62 வயதான கிளாடியா ஷேன்பாம் பதவியேற்று சாதனை படைத்தார்.
கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற இருக்கிறது. முதல்போட்டி மெக்சிகோவில் தென்னாப்பிரிக்க அணியும் மெக்சிகோவும் மோதுகின்றன.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியைப் பார்க்க அதிபர் தனது டிக்கெட்டை 21 வயதான பூர்வகுடி வீராங்கனைக்கு வழங்கியுள்ளார். மெக்சிகோ அரசாங்கம் நடத்திய போட்டியில் வென்ற பூர்வகுடி பெண்ணுக்கு இந்தப் பரிசு அந்த நாட்டின் அதிபரின் கையால் வழங்கப்பட்டுள்ளது. இவருடன் மேலும் 3 பேருக்கும் இதுமாதிரியான டிக்கெட்டுகள் பரிசளிக்கப்பட்டுள்ளன.
வெராக்ரூஸ் பகுதியைச் சேர்ந்த இந்த செர்வாண்டெஸ் குவாகேகுவா என்ற பழங்குடியினப் பெண், பாரம்பரிய உடையணிந்து, காலணிகள் இன்றி கால்பந்தைக் கட்டுப்படுத்தி அசத்தியதன் மூலம் இந்த வாய்ப்பைப் பெற்றார்.
இது குறித்து மெக்சிகோ அதிபர், “இவர்கள் மெக்சிகோவின் பெருமை. அவர்கள் அதிபர்களையோ, அரசாங்கத்தின் தலைமையையோ பிரதிநிதித்துவம் செய்யவில்லை, அவர்கள் மெக்சிகோவை பிரதிந்தித்துவம் செய்கிறார்கள்.
இளம் பெண் கால்பந்து விளையாடுவது நமது நாட்டை பிரதிநிதித்துவம் செய்வதில் சிறந்த விஷயம். சில பேர் மட்டுமே தொடக்க விழாவில் பங்கேற்க முடியும் என்றார்.
சிலர் இதைப் பாராட்டினாலும் நல்வாய்ப்பை அதிபர் இழந்துவிட்டார் என்றும் கூறுகிறார்கள்.