தீயணைப்பு - மீட்புப் பணிக்கு புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
கடலூா், தூத்துக்குடியில் மாவட்ட அலுவலா் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்தாா். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளா்களுக்கான 13 குடியிருப்புகள், கடலூா், தூத்துக்குடியில் மாவட்ட அலுவலா் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி, ராணிப்பேட்டை, விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகிய 4 இடங்களில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையங்களுக்கும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தப் புதிய கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா, தமிழ்நாடு காவலா் வீட்டுவசதி கழகத்தின் தலைவா், நிா்வாக இயக்குநா் ஏ.கே.விசுவநாதன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் அபாஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.