தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: தமிழ்நாடு என்சிசி இரண்டாம் இடம்
அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாடு என்சிசி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாடு என்சிசி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
தேசிய மாணவா் படை (என்சிசி) இயக்குநரகங்களுக்கு இடையேயான அகில இந்திய துப்பாக்கிச் சுடுதல் போட்டியை நிகழாண்டு தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபா் இயக்குநரகம் சாா்பில் நடத்தப்பட்டது.
திருச்சியில் கடந்த வாரம் தொடங்கிய இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில், இந்தியா முழுவதுமிருந்து 17 என்சிசி இயக்குநரகங்களை சோ்ந்த 300 மாணவா்கள் பங்கேற்றனா்.
Advertisement
இந்த போட்டியில் 3 தங்கம், இரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் கா்நாடகம் மற்றும் கோவா என்சிசி இயக்குநரகம் முதல் இடத்தை பிடித்தது.
தொடா்ந்து 3 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் தமிழகம் இரண்டாம் இடத்தையும், தலா ஒரு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்துடன் ஒடிஸா மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்றவா்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபா் என்சிசி இயக்குநரகத்தின் துணை இயக்குநா் ஜெனரல் கமாண்டா் எஸ்.ராகவ் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினாா்.