புகழ்பெற்ற துப்பாக்கி சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா காலமானார்!
புகழ்பெற்ற துப்பாக்கி சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா காலமானதைப் பற்றி...
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவரும், துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 49.
இந்தியாவின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடுதல் வீரர் மற்றும் சர்வதேச அளவிலான பயிற்சியாளர்களில் முதன்மையானர் ஜஸ்பால் ராணா. இவர், இந்தியாவுக்காக காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
வீரராக மட்டுமின்றி பயிற்சியாளாராக, ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கர் மற்றும் சௌரப் சௌத்ரி, அனிஷ் பன்வாலா, சிங்கி யாதவ் போன்ற திறமையான வீரர்களையும் உருவாக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஜஸ்பால் ராணா, ஜெர்மனியின் மியூனிக்கில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டு இன்று (ஜூன் 12) காலை நாடு திரும்பிய போது அவருக்குத் திடீரென மார்பு பகுதியில் ஏற்பட்ட அதிக வலியால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் உடனடியாக தில்லி சாகேத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரது இதயத்தில் அடைப்பு இருந்ததைக் கண்டறிந்த மருத்துவர்கள் அவருக்கு ஸ்டென்ட் பொருத்தினர். அவர் நலமுடன் குணமடைந்து வருவதாகத் தெரிவித்திருந்தனர். வருகிற நாள்களில் அவருக்கு இரண்டாவது முறையாக ஸ்டென்ட் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது உயிர் பிரிந்தது.
யார் இந்த ராணா?
காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் இந்தியாவுக்காக அதிகபட்ச பதக்கங்களை வென்றவர் என்ற பெருமையையும் ஜஸ்பால் பெற்றுள்ளார். இவர் இதுவரை 15 பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் தலைமைப் பயிற்சியாளரான இவருக்கு 1994 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதும், 1997 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2020 ஆம் ஆண்டில் துரோணாச்சார்யா விருதும் வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.
1976 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி உத்தரகண்டில் பிறந்த ஜஸ்பால் ராணா, 1994-ஆம் ஆண்டில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் அறிமுகமானார்.
மிலனில் நடைபெற்ற உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், அவர் இளையோர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். 1994, 1998, 2002, 2006 ஆகிய நான்கு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று பதக்கம் வென்றார்.
அவர் கடைசியாக ஜெர்மனியில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் போட்டியிலும் இந்திய அணி, இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி உள்பட நான்கு பதக்கங்களை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.