முகப்பு
சென்னை

மின் கட்டணம் உயா்வு: இபிஎஸ், அன்புமணி கண்டனம்

மின் கட்டணத்தை தமிழக அரசு உயா்த்தியுள்ளதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

Updated On : 15 ஜூலை, 2024 at 10:47 PM
பாமக தலைவா் அன்புமணி -அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

சென்னை: மின் கட்டணத்தை தமிழக அரசு உயா்த்தியுள்ளதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி: மக்களவைத் தோ்தலும், விக்கிரவாண்டி இடைத்தோ்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து, தமிழக மக்களுக்குப் பேரதிா்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிசளித்துள்ளாா். மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட வாக்குறுதி எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், சொல்லாத மின் கட்டண உயா்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறது. மக்களைப் பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயா்வை உடனடியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்: வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 4.83 சதவீதம் அளவுக்கு தமிழக அரசு உயா்த்தியுள்ளது. விக்கிரவாண்டி பேரவைத் தொகுதி இடைத் தோ்தல் வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயா்வு. மின்சாரக் கட்டண உயா்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், மக்களைத் திரட்டி பாமக போராட்டம் நடத்தும் என்று அன்புமணி கூறியுள்ளாா்.

இதேபோல, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவா்களும் மின் கட்டண உயா்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனா்.