தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் பீஸ் கேரியர் திருட்டு போனதா? இபிஎஸ் கேள்வி
தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கக்கோரி அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கக்கோரி அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாட்டில் கோடை வெயிலுடன் அறிவிக்கப்படாத மின்தடையும் அதிகரித்துள்ள நிலையில், மின் தேவை வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. மின்வெட்டால் வீடுகள், சிறு தொழில்கள், விவசாயம், மாணவர்களின் படிப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எதிர்காலத் தேவைக்கேற்ப உற்பத்தி, கொள்முதல் மற்றும் உள்கட்டமைப்பு திட்டமிடல் போதுமானதாக இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மாவட்டவாரியாக தரவுகள் வெளியிடுதல், நீண்டகாலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் வலியுறுத்துகின்றனர்.
Advertisement
Advertisement
“மின்சாரம் போனது... இன்னும் வரவில்லை ..."
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல நகரங்கள், கிராமங்கள், புறநகர்ப் பகுதிகளில் மக்கள் அதிகமாக உச்சரிக்கும் வாக்கியம் இதுதான்.
ஒரு பக்கம் 40 டிகிரியைத் தாண்டும் வெயில்; மறுபக்கம் அறிவிக்கப்படாத மின்தடை. இதனால் வீடுகள், சிறு தொழில்கள், விவசாயம், மாணவர்களின் படிப்பு என அனைத்தும் பாதிக்கப்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.
தமிழகத்தின் மின்தேவை 2026 - 27ஆம் ஆண்டில் 23,013 மெகாவாட் வரை செல்லும் என்று மத்திய மின்சார ஆணையத்தின் கணிப்பு தெரிவிக்கிறது.
மக்கள் கேட்கும் கேள்வி?
ஒவ்வொரு ஆண்டும் கோடையில் மின்தேவை அதிகரிப்பது அனைவருக்கும் தெரியும்; புதிய தொழிற்சாலைகள் வருவது தெரியும்; மின்சார வாகனங்கள் அதிகரிப்பது தெரியும்; புதிய வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்படுவதால் மின் பயன்பாடு பல மடங்கு உயர்வது தெரியும்.
அப்படியிருக்க, எதிர்காலத் தேவைக்கேற்ப மின் உற்பத்தி, மின் கொள்முதல், சேமிப்பு வசதிகள், துணை மின் நிலையங்கள் போன்றவற்றில் முன்கூட்டியே திட்டமிடல், போதுமான அளவில் ஏன் நடக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஒரே புகார் சமூக ஊடகங்களில் தினமும் நூற்றுக்கணக்கான பதிவுகள்.
இரவு 11 மணிக்கு மின்தடை
குழந்தைகள் தூங்க முடியவில்லை
ஆன்லைன் தொழில்கள் பாதிப்பு
சிறு தொழிற்சாலைகள் இயங்கவில்லை
விவசாய பம்ப் செட் மோட்டார்கள் இயங்க முடியவில்லை
என, பல்வேறு புகார்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. அமைச்சரோ 'பீஸ் கேரியர் திருட்டு' என்று விளக்கம் அளிக்கின்றார். ஆனால், மக்கள் கேள்வி வேறு. “தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் பீஸ் கேரியர் திருட்டு போனதா?" ஒரு மணிநேர மின்தடை என்பது ஒரு வீட்டின் பிரச்சினை மட்டுமல்ல. அது,
தொழிற்சாலைகளில் உற்பத்தி இழப்பு;
விவசாயிகளின் பயிர் பாதிப்பு;
மாணவர்களின் கல்வி பாதிப்பு:
சிறு வணிகர்களின் வருமான இழப்பு;
மருத்துவ சேவைகளுக்கு சிக்கல் என, பல அடுக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மக்கள் எதிர்பார்ப்பது என்ன ? மின் தடைக்கான காரணம் என்ன என்பது பற்றிய விவாதம் அல்ல. மாவட்ட வாரியாக உண்மையான தரவுகள் வெளியிடப்பட வேண்டும். எவ்வளவு மின் தேவை ? எவ்வளவு உற்பத்தி ? எவ்வளவு கொள்முதல் ? எந்த பகுதிகளில் அதிக மின் தேவை என்பதை அறிந்து அதை உடனே சரிசெய்யப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.
தற்போதைய அரசு, கடந்த ஆட்சியின் மீட்சியாகவே இருக்கிறது என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். குறிப்பாக, கடந்த ஆட்சியில் மின்தடை ஏற்படும்போதெல்லாம் அதற்கு அணில்கள் காரணம் என்று சொல்லப்பட்டது. தற்போதைய ஆட்சியில், மின் கடத்தி கட்டை (பீஸ் கேரியர்) திருடு போவதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுபோன்ற பேச்சுகளைக் கைவிட வேண்டும்
ஏனெனில், மின்சாரம் என்பது வெறும் ஒரு வசதி மட்டுமல்ல; அது ஒரு மாநிலத்தின் வளர்ச்சி. தொழில், கல்வி, விவசாயம், வேலை வாய்ப்பு மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையை இயக்கும் உயிர்நாடி. எனவே, மின்தடை பற்றி பொதுமக்களிடம் கூறுவதற்கு காரணங்களைத் தேடி நேரத்தைச் செலவழிக்காமல், தடையில்லா மின்சாரம் வழங்க அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
AIADMK Leader Edappadi Palaniswami urges the TVK government to ensure uninterrupted power supply in Tamil Nadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.