முகப்பு
தமிழ்நாடு

மாதாந்திர மின் கட்டண முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என ராமதாஸ் கூறியிருப்பது...

Updated On : 13 ஜூன் 2026, 3:47 pm IST
ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது வீட்டு மின்சார நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தாலும், தற்போதைய பொருளாதார சூழல், மக்களின் வாழ்வியல் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு மின் கட்டண வசூல் முறையை மாதத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில் மாற்றுவது காலத்தின் தேவையாக உள்ளது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் முழுப் பயனும் பொதுமக்களை சென்றடைய வேண்டுமெனில், மின் கணக்கெடுப்பு மற்றும் கட்டண வசூல் முறையிலும் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

தற்போதைய இருமாத கட்டண முறையால் ஒரே நேரத்தில் அதிக தொகையை செலுத்த வேண்டிய நிலை உருவாகிறது. நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு இது பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது. மாதந்தோறும் கட்டணம் வசூலிக்கப்படும் போது குறைந்த தொகையை எளிதாக செலுத்த முடியும். இதனால் கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதம் மற்றும் அபராதங்களும் குறையும்.

மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மீட்டர் கணக்கெடுப்பில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். தவறான கணக்கெடுப்பு, அதிகப்படியான யூனிட் பதிவு, சராசரி கணக்கீடு போன்ற காரணங்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மாதந்தோறும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் பயன்பாட்டை துல்லியமாக கண்காணிக்க முடியும். தவறுகள் குறைவதோடு, நுகர்வோரும் தங்களது மின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

இன்றைய சூழலில் குடிநீர், தொலைபேசி, இணையம், கேஸ், வீட்டு வாடகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மாதந்தோறும் வசூலிக்கப்படுகின்றன. அதேபோல் மின்சார கட்டணத்தையும் மாதாந்திர அடிப்படையில் மாற்றுவது நிர்வாக ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சாத்தியமானதாகும். தமிழக மின்வாரியத்தில் டிஜிட்டல் மீட்டர்கள், ஆன்லைன் கட்டண வசதிகள் மற்றும் செயலி மூலமான சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், மாதாந்திர கட்டண முறையை அமல்படுத்துவதில் பெரிய சிக்கல்கள் இருக்காது.

மாதாந்திர மின் கட்டண முறையால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்

* பொதுமக்கள் ஒரே நேரத்தில் அதிக தொகை செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

* குடும்பங்களின் மாதாந்திர நிதி திட்டமிடல் எளிதாகும்.

* மின் பயன்பாட்டை கண்காணித்து சிக்கனமாக பயன்படுத்த மக்கள் ஊக்கமடைவார்கள்.

* மீட்டர் கணக்கெடுப்பில் ஏற்படும் தவறுகள் குறையும்.

* மின்வாரியத்தின் வருவாய் வசூல் சீராக நடைபெறும்.

* நிலுவைத் தொகை மற்றும் அபராதம் செலுத்தும் நுகர்வோர் எண்ணிக்கை குறையும்.

* 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் பயன் தெளிவாக கணக்கிடப்படும்.

எனவே, தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மின்வாரிய நிர்வாகத்தை மேலும் வெளிப்படையாகவும் மக்கள் நட்பாகவும் மாற்றும் நோக்கில், தமிழ்நாடு அரசு உடனடியாக மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கெடுப்பு மற்றும் மின் கட்டண வசூல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துள்ளார் அவர்.

summary

The Tamil Nadu government should implement a monthly electricity billing system...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.