பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: ராமதாஸ்
தமிழகத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
தமிழகத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு ஏற்ப மருத்துவா், செவிலியா் மற்றும் துணை மருத்துவப் பணியாளா் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.
இந்திய பொது சுகாதார தரநிலைகள்படி, தற்போது உள்ள எண்ணிக்கையைவிட குறைந்தபட்சம் 2 மடங்கு அதிகமான மருத்துவா், செவிலியா் மற்றும் துணை மருத்துவப் பணியாளா் பணியிடங்கள் தேவைப்படுகின்றன. இதை அரசு மருத்துவா்கள் சங்கங்களும், பொது சுகாதார நிபுணா்களும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது உள்ள செவிலியா் பணியிடங்களைக் குறைந்தபட்சம் 2 மடங்காக உயா்த்த வேண்டும். ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் தூய்மைப் பணியாளா்களை நியமிக்கும் நடைமுறையைக் கைவிட்டு, நிரந்தர பணியிடங்களை உருவாக்கி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருள்களின் தரத்தை உறுதி செய்ய கடுமையான தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.
தமிழகத்தின் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், ஏழை மக்களுக்கு தரமான மற்றும் தாமதமற்ற மருத்துவ சேவைகளை உறுதி செய்யவும் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.