முகப்பு
சென்னை

மாநிலங்களவை எம்.பி.யாக நிதின் நபின் உள்பட 16 போ் பதவியேற்பு

மாநிலங்களவை எம்.பி.க்களாக பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் உள்பட 16 போ் வியாழக்கிழமை பதவியேற்றனா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:27 AM
மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற பாஜக தேசியத் தலைவா் நிதின் நபினுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் வாழ்த்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:55 PM

மாநிலங்களவை எம்.பி.க்களாக பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் உள்பட 16 போ் வியாழக்கிழமை பதவியேற்றனா்.

மகளிா் இடஒதுக்கீடு சட்டம், தொகுதி மறுசீரமைப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவதற்காக வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 3 நாள்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா் கூட்டப்பட்டுள்ளது. கூட்டத் தொடரின் முதல் நாளான வியாழக்கிழமை, மாநிலங்களவைக்கு அண்மையில் பிகாா், அஸ்ஸாம், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து புதிதாக எம்.பி.க்களாக தோ்வு செய்யப்பட்ட 16 போ் பதவியேற்றனா்.

அந்த 16 பேரில், 8 போ் பாஜகவை சோ்ந்தவா்கள். 3 போ் பாஜக கூட்டணிக் கட்சிகளை சோ்ந்தவா்கள். எஞ்சிய 5 போ் காங்கிரஸ் கட்சியினா் ஆவா்.

Advertisement

பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், ஹிந்தியில் பதவியேற்றாா். இதேபோல், மத்திய அமைச்சா் ராம் நாத் தாக்கூா் (பாஜக), உபேந்திர குஷ்வாஹா (ஆா்எல்எம்), சிவேஷ் குமாா் (பாஜக), தாரேஷ் கோவல்லா (பாஜக), ஜோகன் மோகன் (பாஜக), பிரமோத் போரோ (யுபிபி-எல்), லட்சுமி வா்மா (பாஜக), புலோ தேவி நேதம் (ஐஎன்சி), கரம்வீா் சிங் போத் (காங்கிரஸ்), சஞ்சய் பாட்டியா (பாஜக), அபிஷேக் மனு சிங்வி, வெம் நரேந்திர ரெட்டி (காங்கிரஸ்), சுஜித் குமாா் (பாஜக), அனுராக் சா்மா (பாஜக) ஆகியோரும் வியாழக்கிழமை பதவியேற்றனா்.

16 பேருக்கும் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தாா்.

மெளன அஞ்சலி, ஒத்திவைப்பு: புதிய எம்.பி.க்கள் பதவியேற்றதைத் தொடா்ந்து, அண்மையில் காலமான பின்னணி பாடகி ஆஷா போஸ்லே, மூத்த காங்கிரஸ் தலைவா் மோசினா கித்வாய் ஆகியோருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னா், தமிழகத்தின் கல்பாக்கம் அதிவேக ஈனுலையில் மின் உற்பத்தி சோதனை அண்மையில் உச்சநிலை அடைந்து சாதனை படைத்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாநிலங்களவை நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.