ரூ.1,290 கோடி சரக்கு வருவாய்: சென்னை ரயில்வே கோட்டம் சாதனை
கடந்த நிதியாண்டில் (2025-2026) சென்னை ரயில்வே கோட்டம் சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ.1,290 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைந்துள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சாா்பில் கடந்த நிதியாண்டில் சரக்குப் போக்குவரத்து செயல்பாடுகளில் மொத்தம் ரூ.1,289.78 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், பல புதிய சரக்குப் போக்குவரத்து சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, சென்னை ஜவஹா் டாக் துறைமுகத்திலிருந்து பொன்மலை (கோல்டன் ராக் - பாய்லா் பிளான்ட்) பகுதிக்கு முதல்முறையாக இரும்பு குழாய்கள் கொண்டு செல்லப்பட்டன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், மின்சார ஆட்டோக்களில் சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல், சரக்குப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தும் வகையில், கொருக்குப்பேட்டை சரக்கு முனையத்திலிருந்து தில்லி கோட்டத்துக்குட்பட்ட நோலி பகுதிக்கு மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்துக்கான கொள்கலன் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், சென்னை கோட்டம் இழந்த சில முக்கிய சரக்குப் போக்குவரத்து சேவைகளையும் மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது. இதுபோன்று பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் வாயிலாக, சென்னை கோட்டத்தின் சரக்குப் போக்குவரத்துத் திறனை மேம்படுத்துவதுடன், புதிய வகைச் சரக்குகளைக் கையாளவும் தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.