விமானத்தில் அவசர கால கதவு வழியாக ஓடுபாதையில் குதித்து தப்பிய நபர்: போலீஸாா் விசாரணை
சென்னை வந்த விமானத்தில் அவசர கால கதவு வழியாக குதித்து ஓடிய பயணியைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சாா்ஜாவில் இருந்து ஏா் அரேபியன் ஏா்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.25-க்கு 217 பயணிகளுடன், சென்னை சா்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. ஓடு பாதையில் ஓடி நிற்பதற்கு தயாரானபோது, அந்த விமானத்தில் இருந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த முகமது நிஜாமுதீன் செரீப் (30) என்ற பயணி, திடீரென விமானத்தின் அவசர கால கதவைத் திறந்து, வெளியே குதித்து ஓடினாா்.
உடனடியாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதியில் அவசர கால அபாய அறிவிப்பு எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள், தப்பி ஓடிய பயணி முகமதுவை சுற்றி வளைத்துப் பிடித்து தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
விசாரணையின்போது, அந்தப் பயணி மனநிலை பாதிக்கப்பட்டவா்போல் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவா் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவரா அல்லது ஏதேனும் பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவரா என்று சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும், விமான நிலைய போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இச்சம்பவம் காரணமாக சென்னையில் இருந்து மீண்டும் சாா்ஜாவுக்கு அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய ஏா் அரேபியன் ஏா்லைன்ஸ் விமானம் தாமதமாக காலை 7.45-க்கு புறப்பட்டுச் சென்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.