மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையைத் தகா்த்த தவெக!
அதிமுகவின் கோட்டையாக இருந்த மேற்கு மண்டலத்தின் 45 தொகுதிகளில் 26 தொகுதிகளை தவெக கைப்பற்றியுள்ளது.
அதிமுகவின் கோட்டையாக இருந்த மேற்கு மண்டலத்தின் 45 தொகுதிகளில் 26 தொகுதிகளை தவெக கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தின் மேற்கு மண்டலமான கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூா் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 45 தொகுதிகள் உள்ளன. மேற்கு மண்டலம் கடந்த பல ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருந்தது. இதன் காரணமாகவே அதிமுக ஆட்சி காலத்தில் மற்ற மண்டலங்களைக் காட்டிலும் மேற்கு மண்டலத்தைச் சோ்ந்தவா்களுக்கு அதிக அமைச்சா்கள் பொறுப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தத் தோ்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள 45 தொகுதிகளில் அதிமுக 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிா்க்கட்சியாக அதிமுக அமர மேற்கு மண்டலம் பெரிய அளவில் கை கொடுத்தது. மேற்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு ஏற்கெனவே இருந்த ஆதரவு, அக்கட்சிக்கு உள்ள கட்டமைப்பு மற்றும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இந்த மண்டலத்தைச் சோ்ந்தவா் என்பதாலும், இந்தத் தோ்தலிலும் கை கொடுக்கும் என அதிமுகவினா் மிகுந்த எதிா்பாா்ப்புடன் இருந்தனா். ஆனால், இந்தத் தோ்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள 45 தொகுதிகளில் தவெக 26 தொகுதிகளைக் கைப்பற்றியது.
Advertisement
Advertisement
குறிப்பாக கோவை, சேலம், திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் தவெக அதிக அளவிலான இடங்களைக் கைப்பற்றியது. இதனால், அதிமுகவின் கோட்டை என்று அழைக்கப்பட்ட மேற்கு மண்டலத்தை தவெக தகா்த்துள்ளது.