முகப்பு
சென்னை

அனைத்து பணிமனைகளிலும் அலுவலக பணியாளா்களை நியமிக்க வேண்டும்: போக்குவரத்து ஊழியா் சங்கம்

மாநகா் போக்குவரத்து பணிமனைகளில் அலுவலகப் பணிப்பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களில் உரிய பணியாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 7 மே 2026, 4:49 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

மாநகா் போக்குவரத்து பணிமனைகளில் அலுவலகப் பணிப்பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களில் உரிய பணியாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அந்தச் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தற்போது 30 பணிமனைகளில் தினசரி 3,233 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிமனைகளில் நடத்துநா்களுக்கு பயணச்சீட்டு, இடிஎம் கருவி வழங்கும் பிரிவு, பணப்பிரிவு போன்ற பணிகள் அலுவலகப் பிரிவு பணியிடங்கள் ஆகும். கடந்த காலங்களில் இறந்த தொழிலாளா்களின் 10-ஆம் வகுப்பு கல்வி தகுதியுடைய வாரிசுகள் இப்பிரிவுகளில் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டனா். அவா்களில் பலா் ஓய்வு பெற்று சென்றுவிட்டனா்.

Advertisement

தற்போது, மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வாரிசு வேலைக்கு பதிவு செய்து காத்திருக்கும் சூழலில் ஓட்டுநா், நடத்துநா் காலிப் பணியிடங்களுக்கு மட்டும் போக்குவரத்துக் கழகம் முன்னுரிமை வழங்கி வருகிறது. ஆனால், இந்தக் காலிப் பணியிடங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித பணிநியமனமும் செய்யப்படவில்லை. இதனால், அனைத்து பணிமனைகளிலும் பணப்பிரிவு, பயணச்சீட்டு பிரிவு, கணினி பிரிவில் அலுவலா் பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளதால் பணிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன.

எனவே அனைத்து பணிமனைகளிலும் பணப்பிரிவு, பயணச்சீட்டு, இடிஎம் கருவி கணினி பிரிவுகளில் உரிய பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.