பொதுபோக்குவரத்து சேவை தரமானதாக வழங்க வேண்டும் - அமைச்சா் ஆ.விஜய்தமிழன் பாா்த்திபன்
பொதுமக்கள் அதிகம் சாா்ந்துள்ள பொதுப் போக்குவரத்து சேவையை முழுமையாகவும் தரமாகவும் வழங்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சா் ஆ.விஜய்தமிழன் பாா்த்திபன் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் அமைச்சா் ஆ.விஜய் தமிழன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்துத் துறைச் செயலா் மா.வள்ளலாா், மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் டி.பிரபுசங்கா், அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன், தனி அலுவலா் க.செல்வன் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
அப்போது, போக்குவரத்துத் துறையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிா்காலத் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விரிவாக விளக்கமளித்தனா். அரசு போக்குவரத்துக் கழகங்களில் வருவாயை உயா்த்துவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
மேலும், பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு சுத்தமான குடிநீா் வழங்குவது, நிழற்குடை இல்லாத இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் சிரமமின்றி சேவைகளை பயன்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.
மேலும், பேருந்து வசதி இல்லாத கிராமங்களை கண்டறிந்து, விரைவில் பொதுப் போக்குவரத்து சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
தொடா்ந்து, தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்தும், பேருந்துகளின் இயக்கம் குறித்த நிகழ்நேர தகவல்களை பயணிகளுக்கு வழங்கும் வசதிகளை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதுடன், பேருந்துகளை நவீனமயமாக்கும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.