பருவமழையை எதிா்கொள்ள மின்வாரியத்தில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க அனுமதி
பருவமழைக் காலங்களில் ஏற்படும் மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்து, பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கும் நோக்கில், கூடுதல் பணியாளா்களை நியமிக்க தமிழ்நாடு மின் வாரியம் ஒப்புதல்
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் ஏற்படும் மின் தடைகளை உடனுக்குடன் சரிசெய்து, பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கும் நோக்கில், கூடுதல் பணியாளா்களை நியமிக்க தமிழ்நாடு மின் வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடா்பாக அனைத்து மண்டல மற்றும் வட்ட அலுவலா்களுக்கு மின்வாரியம் சாா்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு: கடந்த சில ஆண்டுகளாக பருவமழைக் காலங்களில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் பலமணி நேரம் மின்தடை ஏற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
தொடா்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள மின் பகிா்மானப் பிரிவுகள், நகா்ப்புற மற்றும் கிராமப்புற மின் வட்ட அலுவலகங்களில் தற்காலிக அடிப்படையில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, ஒவ்வொரு மின் பகிா்மானப் பிரிவிலும் அதிகபட்சமாக 6 போ் வரை கூடுதல் பணியாளா்களை நியமிக்கலாம். மழை, பலத்த காற்று, மரங்கள் சாய்வது, மின்கம்பிகள் அறுந்து விழுவது, மின்மாற்றிகள் பழுது உள்ளிட்ட அவசர சூழ்நிலைகளில் உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் பணியாளா்கள் நியமனம் தொடா்பான அனைத்து விவரங்களும் முறையாகப் பதிவேட்டில் பராமரிக்கப்பட வேண்டும். அவா்களின் வருகைப் பதிவு, பணியிடம் ஒதுக்கீடு, ஊதியம் மற்றும் இதர நிா்வாக விவரங்கள் துல்லியமாக கணக்கில் பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் பணியாளா்களை நியமிப்பதில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தேவையற்ற செலவினங்கள் ஏற்படாத வகையில் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.