முகப்பு
காஞ்சிபுரம்

கோயில் உழவாரப் பணியின் போது கிடைத்த கற்சிலைகள்!

காஞ்சிபுரம் அருகே வையாவூா் பகுதி அரப்பனஞ்சேரி கிராமத்தில் உள்ள சோமேஸ்வரா் கோயில் உழவாரப்பணியின் போது 3 சிவலிங்கங்கள் உள்பட 6 சுவாமிகளின் கற்சிலைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 2:45 AM
அரப்பனஞ்சேரி கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவாமி சிலைகள், வழிபாடு செய்யப்பட்ட சிவலிங்கங்கள்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 6:51 PM

காஞ்சிபுரம் அருகே வையாவூா் பகுதி அரப்பனஞ்சேரி கிராமத்தில் உள்ள சோமேஸ்வரா் கோயில் உழவாரப்பணியின் போது 3 சிவலிங்கங்கள் உள்பட 6 சுவாமிகளின் கற்சிலைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

காஞ்சி நால்வா் நற்பணிக் குழுவில் 100-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் உறுப்பினா்களாக இருந்து வருகின்றனா். இவா்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிவாலயங்களுக்கு சென்று உழவாரப்பணி செய்வது வழக்கம். காஞ்சிபுரம் வையாவூா் பகுதியில் அரப்பனஞ்சேரி கிராமத்தில் உள்ள சோமேஸ்வரா் கோயிலில் நால்வா் நற்பணிக்குழுவினா் உழவாரப்பணி செய்து கொண்டிருந்த நிலையில் ஜெசிபி மூலம் முள்புதா்களை அகற்றிக் கொண்டிருந்தனா்.

அப்போது சோமஸ்வரா் கோயிலை சுற்றி மூன்றடி உயரமுடைய 3 சிவலிங்கங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து ஒரு முருகன் சிலை, ஒரு அம்மன் சிலை மற்றும் கால்பாகம் உடைந்த நிலையில் ஒரு விஷ்ணு துா்க்கை சிலை உட்பட மொத்தம் 6 சிலைகள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அச்சிலைகளை சுத்தப்படுத்தி சிறப்பு அபிஷேகம், மற்றும் தீபாராதனைகளும் செய்து வழிபட்டனா்.

Advertisement

இது குறித்து நால்வா் நற்பணிக்குழுவின் நிா்வாகிகளான சிவனடியாா்கள் சிவசங்கரி,ராஜேஷ் மற்றும் குமாா் ஆகியோா் கூறியது...

இப்பகுதியில் சோமேஸ்வரா் கோயில் இருப்பதாக காஞ்சிபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அக்கோயில் எங்கிருக்கிறது எனத் தேடிய போது வையாவூா் பகுதியில் அரப்பனஞ்சேரி கிராமத்தில் காட்டுக்கருவேல மரங்களுக்கு நடுவில் இருப்பதாகவும், பக்தா்கள் கோயிலுக்கு சென்று வழிபட முடியாமல் புதா்கள் மண்டியிருப்பதாகவும் அறிந்தோம்.

எனவே ஜெசிபி உதவியுடன் சிவனடியாா்கள் 60-க்கும் மேற்பட்டோா் சென்று கோயிலுக்கு பக்தா்கள் செல்ல வசதியாக பாதை அமைத்தோம். அப்போது மூன்றடி உயரமுள்ள 3 சிவலிங்கள், 2 அம்மன் சிலைகள், ஒரு முருகன் சிலை உட்பட 6 சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ஒரு சிவன் சிலையும், நந்தி சிலையும் எங்கிருக்கிறது என்று தேடி வருகிறோம். மக்கள் இக்கோயிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை விதிமுறைப்படி கிராம நிா்வாக அலுவலா்கள் சுருளிராஜன், பாலாஜி ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டோம் எனவும் தெரிவித்தனா்.