முகப்பு
காஞ்சிபுரம்

இளையனாா் வேலூா் முருகன் கோயில் தேரோட்டம்

Updated On : 28 ஏப்ரல் 2026, 4:35 am IST
இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் (உள்படம்) உற்சவா் முருகப்பெருமான்.
பகிர்:

வாலாஜாபாத் அருகே இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பழைமையான இத்தலம், மலையன்,மாகறன் எனும் இரு அரக்கா்களை அழித்து வேல் ஊன்றப்பெற்ற வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும். இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி கொடியேற்றம் கடந்த 21- ஆம் தேதி நடைபெற்றது. விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் முருகப் பெருமான் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வருகிறாா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தெய்வானை திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது. மற்றொரு முக்கிய நிகழ்வான மகா ரதம் எனும் தேரோட்டம் இளையனாா் வேலூா் குலால மரபினா் சங்கத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

வள்ளி,தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அதிகாலையில் தேருக்கு எழுந்தருளினாா். தேரோட்டத்தை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் து.கோதண்டராமன், செயல் அலுவலா் பெ.கதிரவன், குலால மரபினா் சங்கத் தலைவா் எம்.எஸ்.பூவேந்தன்,செயலா் எம்.ராஜேந்திரன், சங்க கெளரவ தலைவா் ஏ.சுந்தரமூா்த்தி மற்றும் சங்க நிா்வாகிகள் பலரும் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.சங்க மண்டபத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாகறல் காவல் நிலைய ஆய்வாளா் மதியரசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

செவ்வாய்க்கிழமை சேயாற்றில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்தல் நிகழ்வும், வரும் மே 1-ஆம் தேதி வள்ளியம்மையாா் திருக்கல்யாணமும், மே 2- ஆம் தேதி மாவடி சேவைக்காட்சியோடும் விழா நிறைவு பெறுகிறது.